இந்தியத் தத்துவம் – பொருள்முதல்வாதம் : பி.ஏ.கிருஷ்ணன்


இந்தியத் தத்துவம் – பொருள்முதல்வாதம் : பி.ஏ.கிருஷ்ணன்

தமிழில் : சதீஷ்குமார் ஆர் எம்

“இந்தப் பகுதியில் ஆசிரியர் இந்திய தத்துவ மரபில் பொருள்முதல்வாதம் தரும் வரையறை, எங்கு பொருந்துகிறது, ஏன் வழக்கத்தில் இருந்து மறைந்தது என்பனவற்றை விளக்குகிறார். ஆறு பிரமாணங்களை பட்டியலிட்டு, விளக்கி, பொருள்முதல்வாதம் உபயோகிக்கும் ஒரே பிரமாணமான புலனறிவை மேலும் விளக்குகிறார். பிரஹஸ்பதி, பாயாசி, அஜித கேசகம்பலா போன்ற பொருள்முதல்வாத ஆசிரியர்களின் வாதங்களை முன்வைத்து, பொருள்முதல்வாதத்தின் முக்கிய பங்களிப்புகளை அடிக்கோடிடுகிறார். கடைசியாக, பொருள்முதல்வாத பள்ளியை சாராத, நாத்திக மரபை அறிமுகப்படுத்துகிறார்.” – மொழிபெயர்ப்பாளர்

இந்தியத் தத்துவம் – ஓர் அறிமுகம்
இந்தியத் தத்துவம்- வேதங்கள்

பொருள்முதல்வாதம்

பொருள்முதல்வாதம் அல்லது பொருண்மைவாதம்(பொருள்+உண்மை) போன்ற சொற்கள் பொது மொழியில் எதிர்மறையாகவே பார்க்கப்படுகின்றன. பொருள்முதல்வாதியின் நோக்கம் என்பது அறமின்றி அடைய விருப்பப்படுவதாகவும், தாழ்வானதாகவும் கருதப்படுகிறது. மறுபுறம், கருத்துமுதல்வாதம் என்பது நேர்மையின் பக்கம் நிற்பதாகவும் பார்க்கப்படுகிறது. உயர்ந்த கொள்கைகளை நம்புவராகவும், அவை எவ்வளவு கடினமானவையாக இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த முயல்பவராகவே கருத்துமுதல்வாதி முன்வைக்கப்படுகிறார்.

எனினும் தத்துவத்தில், பொருள்முதல்வாதம் மற்றும் கருத்துமுதல்வாதம், இவ்விரு சொற்களும், வேறுவிதமாக புரிந்துகொள்ளப்படுகின்றன. பொருள்முதல்வாததிற்கு கிடைக்கப்பெறும் பல்வேறு வரையறைகளில், ஸ்டான்போர்ட் தத்துவ கலைக்களஞ்சியம்(Stanford Encyclopedia of Philosophy) அளிக்கும் வரையறையை காண்போம்: “பொருண்மை ஒன்றே உண்மை. உணர்வு என்பதும் உணர்வின் பல நிலைகளும் பொருண்மையின் இயக்கத்தினாலேயே நிகழ்கின்றன. அவற்றிற்கு தனியாக இருத்தல் கிடையாது.”

இந்திய தத்துவ அமைப்புகளில் ஆறு இந்து தத்துவங்களும், பவுத்த, சமண தத்துவங்களும் கருத்துமுதல்வாத தரப்பை சேர்ந்தவை. அதற்கு நேர் எதிராக நிற்பது பொருள்முதல்வாதம். அது மனிதர்கள் பற்றிய உண்மைகள், மானுட வரலாற்றை பற்றிய உண்மைகளைப் பேசுகிறது. எல்லா உண்மைகளுமே பொருண்மையோடு காரண-காரிய அடிப்படையில் சார்ந்திருப்பவை. காரணம் என்ற சொல்லை இங்கே அடிக்கோடிட வேண்டும். அதாவது ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அப்படியெனில் என் இருப்பின் காரணம் என்ன? என் பெற்றோர் உறவுக் கொண்டதே என் இருப்பின் தோற்றக் காரணம். என் பெற்றோர் இணைந்ததனால் நான் பிறந்தேன். எனவே என் பெற்றோரை நான் காரணரீதியாக சார்ந்திருக்கிறேன். இது ஒரு பௌதிக யதார்த்தம்.

தொன்மையான இந்திய பொருள்முதல்வாத தரப்பினர் உடலை தவிர்த்த ஆன்மா ஒன்று உள்ளது என்று பேசுவதை அர்த்தமற்றதாகவும், வீடுபேறு என்கிற கருத்தை மோசடியாகவும் காண்கிறார்கள். அவர்கள் ஊழ்வினை என்கிற கருத்தை கேலி செய்தனர். முக்கியமாக பிராமணர்களையும் துறவிகளையும் குறைகூறினர். வால்மீகி இராமாயணத்தில் ஜபாலி ராமனிடம் “ஒருவர் சாப்பிடுவதால் மற்றவர் பசியாறமுடியுமா? பிராமணர்களுக்கு அளிக்கப்படும் உணவு, இவ்வுலகை நீங்கியவர்களுக்கு உணவாகுமா? வஞ்சகமான புரோகிதர்கள், உள்நோக்கத்துடன் உத்திகளை அமைத்து தானங்கள் தரவும், உடைமைகளை நீங்கவும், பிரார்த்திக்கவும் சொல்கின்றனர்” என்று சொல்கிறார்.

பொருள்முதல்வாதம் பற்றி மேலும் விளக்கமாக பார்ப்பதற்கு முன் பிரமாணங்கள்(Pramana) என்றால் என்ன என்று பார்ப்போம். இந்திய தத்துவ அமைப்பில் பிரமாணம் ஒரு முக்கியமான கருதுகோள். பிரமாணம் என்பது உலகை பற்றி துல்லியமான, சரியான அறிவை பெற உதவும் கருவி அல்லது அளவுகோல் அல்லது சான்று. நாம் இங்கே பிரமாணம் என்றால் சான்று என்று எடுத்துக்கொள்ளலாம். ஆறுவகை பிரமாணங்கள் உள்ளன.

 1. பிரத்யக்‌ஷா (புலனறிவு): புலன்களால் அறிவதை ஏற்பது. உதாரணமாக கண்களால் காண்பதும், நாவால் சுவைப்பதும், மூக்கால் நுகர்வதும். பிறந்தால் இறப்புண்டு. இரத்தம் சிவப்பு.

2. அனுமானா (ஊகம்): ஒன்றுக்கும் மேற்பட்ட அவதானிப்புகளையும், நாம் முன்பு பயன்படுத்திய கருவிகளையும் வைத்து, காரணத்தையும் பயன்படுத்தி புதிய முடிவையும் உண்மையையும் அடைவது. புகை இருந்தால் தீ இருக்கும் என ஊகிப்பது. கருமேகங்கள் இருந்தால் மழை பெய்யுமென ஊகிப்பது.

3. ஸப்தா (ஸ்ருதி/வேதம்): வேத முனிவர்களின், கடந்த கால தற்கால நிபுணர்களின், ஞானிகள், அறிஞர்களின் சொற்களை சார்ந்திருப்பது. சப்த பிராமணத்தை நம்பகமான, நிபுணர் சான்று என்கிறார் ஹிரியண்ணா.

4. உபமானா (உவமை): உவமை மூலமாக அறிந்துகொள்வது. வெறும் வார்த்தையாக மட்டுமே தெரிந்த ‘எருமை’ என்பதை அறிய, அது ‘பசுவை போல்’ இருக்கும், சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருக்கும் என தெரிந்து கொண்டு, பின்னர் நேரில் எருமையை காணும்போது அது எருமை தான் என தெரிந்து கொள்வது.

5. அர்த்தாபத்தி (உள்ளர்த்தம்): தேவதத்தன் ஆரோக்கியமாகவும், கொழுத்த தொப்பையுடன் இருக்கிறான். ஆனால் அவன் பகல் பொழுதுகளில் உணவு உட்கொள்வதில்லை. அப்படியென்றால் அவன் இரவில் உணவு உட்கொள்கிறான் என உள்ளர்த்தம் கொள்வது.

6. அனுபலப்தி(உணரமுடியாமை): உதாரணம்: இந்த அறையில் யானை இருந்தால் அதை நான் உணர முடியும். நான் அப்படி எதையும் உணரவில்லை. அதனால் இந்த அறையில் யானை இல்லை. இதுதான் அனுபலப்தி பிராமணம்.

ஏன் இந்த ஆறு பிரமாணங்கள், அளவுகோல்கள் அல்லது சான்றுகள்? இந்த பிரமாணங்களில் ஏதேனும் ஒன்றை ஏற்காத ஒருவருடன் விவாதிக்க இயலாது. விவாதிக்க ஒரு அமைப்பு தேவை. இவற்றில் ஒன்றையாவது ஏற்றுக்கொண்டால் மட்டுமே விவாதத்திற்கு இடமிருக்கும். இல்லையெனில் விவாதங்கள் சரியாக பொருந்தாமல், வெறும் மறுப்புகளாகவும் நிந்தனைகளாகவும் ஆகும். விவாதம் நடைபெற களமே இருக்காது.

ஞானத்தேடலுக்கும், வீடுபேறுக்குமான வழியில் பயணிக்க, வேதங்களின் இன்றியமையாமை மற்றும் அதன் உண்மைத்தன்மையை வேத அறிஞர்கள் மிக உறுதியாக வலியுறுத்தினர். பெரும்பாலும் பவுத்தர்கள் மற்றும் சமணர்களிடம் இருந்து இது மறுப்பையும் விமரிசனத்தையும் பெற்றது. ஆனால் மிகக் கடுமையான விமரிசனம் பொருள்முதல்வாதிகளிடம் இருந்துதான் வந்தது.

சூத்திர எழுத்து முறை (Sutra) எல்லா இந்திய இந்து தத்துவ மரபுகளுக்கும் பொதுவான ஒன்று. வலுவான பொருள்முதல்வாத சிந்தனை மரபும் இதே சூத்திர எழுத்து அமைப்பை பயன்படுத்தியது. ஆனால் இந்திய தத்துவவாதிகள் மதிப்புடன் பேணி வந்த எல்லாவற்றையும் நிராகரிக்க இவர்கள் சூத்திரங்களை பயன்படுத்தினர். அதே அளவு பகைமையை பவுத்த, சமண நம்பிக்கைகளின் மேலும் காட்டினர். பொருள்முதல்வாதிகள் உண்மையில் தொன்மையான இந்திய சிந்தனை மரபிற்குள் இருந்த கலகக்காரர்கள்; இம்மண்ணுலகில் வாழ்வியலை ஊன்றிய முன்னோடி தத்துவவாதிகள். சார்வாக தத்துவம்(Cārvāka), பிரஹஸ்பதியர் தத்துவம் (Bārhaspatyar), லோகாயதா தத்துவம் (Lokāyata = Lokeshu + Ayatha) எனவும் அழைக்கப்படும். மக்களிடம் பரவலாக பயன்பாட்டில் இருந்ததால் லோகாயதா என பெயர் பெற்றது.

புத்தரின் காலத்தில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த பொருள்முதல்வாத கருத்துகளில் இருந்து லோகாயுதா தூண்டுதலை பெற்றது. இம்மரபின் முக்கியமான சூத்திரங்கள் பிரஹஸ்பதியால் இயற்றப்பட்டன. அவை சார்வாக சூத்திரங்கள் என அழைக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக இவை தொலைந்துவிட்டாலும், இவற்றின் எதிர்ப்பாளர்களின் கடுமையான, ஆத்திரமான மேற்கோள்களின் வாயிலாக ஓரளவிற்கு புனரமைக்கப்பட்டன. பிற்கால சார்வாக சிந்தனையாளர்கள் பற்றிய தரவுகளும், சார்வாக சிந்தனையின் சாரமான செய்யுள்களும் இவ்வாறு மறுவழிகளில் மட்டுமே கடத்தப்பட்டன.

உண்மையில், நாம் இப்போதுவரை அறிந்த அனைத்து மரபுகளிலும், எஞ்சியுள்ள சார்வாக மரபின் படைப்புகள், அதன் பொருட்டில்லாத்தன்மை காரணத்தால், மிகக்குறைவாகவே பேணப்பட்டுள்ளது. எனினும் இது பதினாறாம் நூற்றாண்டு வரை மறக்கப்படாமல் இருந்து, பேரரசர் அக்பருக்கு விளக்கப்பட்டுள்ளது. மற்றவரின் அதிகாரத்திற்கு உட்படாமல், சுதந்திரத்தை தேர்ந்து இருக்க இயலும் இடமே சொர்க்கம் என சார்வாகர்கள் கருதுகிறார்கள் என்றும், புற ஒழுங்கை தரும், கருணைமிக்க ஆட்சிமுறையை மட்டுமே ஏற்பார்கள் என்றும் அக்பருக்கு விளக்கப்பட்டது. எனினும் ஆரம்பத்தில் இருந்தே சார்வாகர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டனர்.

தேவிபிரசாத் சடோபாத்யாய மகாபாரதத்தின் ஒரு பகுதியை உதாரணமாகக் காட்டுகிறார். பாரதப் பெரும் போருக்கு பின் வெற்றியுடன் பாண்டவர்கள் திரும்பி வரும்போது, நகர வாயிலில் யுதிஷ்டிரனை வாழ்த்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் ஒரு சார்வாகன் வெளிப்பட்டு, ‘நீ உன் நெருங்கிய சொந்தங்களையும், சகோதரர்களையும் கொன்றதால் உன்னை இந்த பிராமணர் கூட்டம் சபிக்கிறது. உன் சொந்த மக்களையும் பெரியோரையும் கொன்று நீ அடைந்தது என்ன?’ என கூவினான். இந்த கடும் வெளிப்பாடு, அங்கே யுதிஷ்டிரனை வாழ்த்த மட்டுமே வந்த பிராமணர்களை திடுக்கிட செய்தது. யுதிஷ்டிரன் பெரும் அவமானத்திற்கு உள்ளாகி, உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்தான். சுதாரித்த பிராமணர்கள், அந்த சார்வாகன் வெறும் பழிகாரன் என்று சொல்லி யுதிஷ்டிரனை ஆற்றுபடுத்தினர். பின்னர் சார்வாகனை தீவைத்து கொளுத்தினார்கள். மகாபாரதத்தின் இந்தப் பகுதி, சார்வாக தத்துவத்தின் மீது பிராமணர்கள் கொண்டிருந்த வெறுப்பை காட்டுகிறது.

பிரஹஸ்பதி (Brihaspati)

வேத சடங்கு வழிமுறைகளையும், துறவு வாழ்வையும் சார்வாகர்கள் எதிர்த்தனர். சமண மற்றும் பவுத்த வாழ்வுமுறை, இந்த வாழ்விலோ அல்லது விண்ணுலகிலோ அல்லது மறுபிறவியிலோ நற்செயல்கள் நற்பயன்களை அளிக்கும் என வாக்களித்தது. மத சடங்குகளை செய்யக்கூடாது மற்றும் மத உட்பிரிவுகளை நம்பக்கூடாது என்ற இரண்டு தொடர் சூத்திரங்களின் வாயிலாக பிரஹஸ்பதி இதை அப்பட்டமாக மறுக்கிறார். சொர்க்கம், இறுதி வீடுபேறு, விண்ணுலகில் ஆத்மா, நெறிகள் என யாவும் இல்லை என்றும் அவை உண்மையில் எதையும் விளைவிப்பதில்லை என்றும் மறுக்கிறார். யாகம் வளர்ப்பது, வேதங்கள் ஓதுவது, துறவிகளாக, திரிதண்டி சன்யாசிகளாக, சாம்பல் பூசிய உடல்கள் கொண்டு திரிவது போன்றவை அறிவும் வீரமும் இல்லாதவர்களின் வாழ்வுமுறை என பிரஹஸ்பதி கூறுகிறார். வேதத்தை நம்புகிறவர்களையும் பவுத்த சமண துறவிகளையும் பரிகசிக்கிறார்.  சில சார்வாக செய்யுள்கள் பிராமணர்களை குறி வைக்கின்றன. இங்கே அளிக்கப்படும் படையல்கள், விண்ணுலகில் இருப்பவர்களுக்கு சென்று சேரும், மகிழ்விக்கும் எனில், இந்த கூரையின் கீழுள்ளவர்களுக்கு அளிப்பதை விட, கூரையின் மேல் நிற்பவர்களுக்கு அளித்தால் எளிமையாக இருக்கும் அல்லவா என சார்வாகர்கள் கேட்கிறார்கள். சமண துறவிகளை கடும் உடல் நோன்புகளை மேற்கொள்ளும் நிர்வாண அறிவிலிகள் என்றும் கீழ்மைப்படுத்துகிறார்கள். எனினும் இம்மாதிரி வாதங்களை முதலில் வைத்தது பிரஹஸ்பதி அல்ல.

அஜித கேசகம்பலா (Ajita Kesakambali / Āqíduō Chìshěqīnpóluó):

புத்தரின் சம காலத்தில் வாழ்ந்த அஜித கேசகம்பலா, அவிகளோ தானங்களோ எந்த பலனையும் விளைவிக்காது, நல்லது செய்வதோ கெட்டது செய்வதோ எந்த பலனையும் உருவாக்காது என கூறுகிறார்.  மனிதனுக்கு, உடலின் இறப்பிற்கு பின் வாழக்கூடிய ஆத்மா இல்லை என்கிறார். இவ்வுலகையும் விண்ணுலகையும்  மறுக்கிறார். இந்தத் தீவிர நிலைப்பாடு அவரை எதையும் சந்தேகப்படுபவராக அவநம்பிக்கைவாதியாக(Nihilist) அடையாளம் காட்டினாலும், அவர் சொன்னது நமது செயல்களுக்கு, இவ்வுலகிலோ, விண்ணுலகிலோ, முற்பயன் அல்லது விளைப்பயன் இல்லை என்பது மட்டுமே. வேதங்களின் அடிப்படையற்ற வாக்குறுதிகளின் காலத்தில், புத்தர் அல்லது மகாவீரர் வாழ்ந்த காலத்தில், அஜிதர் மற்றும் சார்வாகர்கள் நாம் செய்யும் செயல்களின் வெளிப்படை மற்றும் உடனடியான விளைவுகள் பற்றி மட்டுமே ஆராய்ந்தனர். அதனால் மனம் அல்லது ஆத்மா, உடல் இல்லாமல் தனித்து வாழும் என்கிற கொள்கையை இந்திய தத்துவத்தின் மிக ஆரம்ப காலத்திலேயே அவர்கள் மறுத்தனர். வேத சடங்குகளை, முற்பயன்களை மறுத்த அஜித கேசகம்பலா, மறுபிறப்பையும் மறுக்கிறார். மனித உடல் நான்கு கூறுகளால் ஆனது. ஒருவர் இறந்த பின் மண் கூறு மண்ணுக்கும், நீர்க் கூறு நீருக்கும், தீக்கூறு தீக்கும், காற்றின் கூறு காற்றிற்கும் திரும்புகின்றன. அங்கங்கள் விண்ணில் கரைந்து, எலும்புகள் சாம்பலில் எஞ்சுகின்றன. மரணத்திற்கு பின் எஞ்சுவது இவைதான் என அஜிதர் தெளிவுறக் கூறுகிறார்

பாயாசி (Pāyāsi / Paesi)

சார்வாக பார்வையை கொண்ட மற்றுமொரு பெரும் முன்னோடி பாயாசி எனும் ஒரு இளவரசர். இவரும் அஜிதர் போலவே, புத்தரின் சம காலத்தவர். இவரின் சிந்தனைகளை புத்த ‘நிகாய’(Nikāya) வில் பதிந்துள்ளனர். உடலில் இருந்து பிரிக்க இயலா ஆத்மாவை அவர் எப்படி ‘சோதித்து’ புரிந்து கொண்டார் என அதிலிருந்து தெரியவருகிறது. இந்த சோதனைகள் தற்காலத்திய அறிவியல் முறைகளின் கீழ் வராது என்றாலும் நம் கவனத்தை ஈர்ப்பவை. மூடியுடன் கூடிய ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு மனிதனை அடைத்து அவனை கொல்ல வேண்டும். கவனத்துடன் மூடியை விலக்கி, ஆத்மா வெளியேறுகிறதா என பார்க்க வேண்டும். இப்படிச் செய்யாவிட்டாலும் கூட, ஒருவரை கொல்லும் போது இறக்கும் தருவாயில் உடலில் இருந்து எதுவும் வெளியேறுகிறதா என கவனிக்கலாம்.  எதுவும் வெளியேறாது. எனவே, ஆத்மா என்பது இல்லை என்கிறார்.  மனித உடலை தோலில் இருந்து உள் வரை அடுக்குகளாக உரித்து ஆத்மா தெரிகிறதா எனப் பார்க்கலாம் என்றும் சொல்கிறார். புத்தருடன் உடனிருந்த காசியபர் என்பவருடனான உரையாடலில் இவை வருகின்றன. காசியபர் இவ்விவாதத்தில் மிகத் திறமையாகப் பதிலுரைக்கிறார். இப்படி கொடூரமாக மனித உடலை அடித்து ஆத்மாவை தேடுவது, இசைக்கலைஞர் ஒருவர் வாசிக்காதபோது, ஒரு புல்லாங்குழலை உடைத்து இசையை தேடுவது போல. ஆத்மா இல்லாத உடல் செயலற்றது் என்று விளக்கி காசியபர் பாயாசியை மறுக்கிறார்.

இதே பாயாசி, சமண இலக்கியத்தில், கேசி என்பவருடனான உரையாடலில் வருகிறார். எறும்புக்கும் யானைக்கும் ஆத்மா ஒரே அளவானது எனில், ஏன் யானையின் செயல்கள் மட்டும் எறும்பினுடையவை விட சிறப்பானவையாக உள்ளன என்பது பாயாசியின் கேள்வி. கேசி இதற்கு உவமையுடன் பதிலளிக்கிறார். கதவுகள், ஜன்னல்கள் ஏதுமில்லா ஒரு பெரிய கூடத்தின் மையத்தில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தால், அது அந்த கூடம் முழுதும் ஒளியேற்றும். வெளியே வெளிச்சம் கசியாது. அவ்விளக்கின் மேல் ஒரு கூடையை கவிழ்த்து வைத்தால், கூடம் ஒளியை இழந்து, அந்த கூடையின் உள்ளே மட்டுமே ஒளி இருக்கும். அதே போல, முற்பிறவியின் ஊழ்வினையை பொருத்து உடலும் தகுந்த ஆத்மாவை பெறும் என்கிறார். ஆகவே, ஆத்மாவும் உடலும் வேறு, ஒன்றேயல்ல எனச் சொல்கிறார். பாயாசி இதை மறுத்து, இறப்பு அனைத்தையும் அழிக்கிறது, ஆத்மா என ஏதுமில்லை என்கிறார். பவுத்த, சமண துறவிகளும், நெறிகளும் நற்பண்புகளும் கூடிய பிராமணர்களும் யாவரும் உயிரை நேசிக்கின்றனர் என்பது வெளிப்படை. மரணத்திற்கு பின்னான வாழ்வு மேலும் நல்ல நிலையில் இருக்கும் என தெரிந்தும், அவர்கள் ஏன் உயிரை மாயத்துகொள்ளவில்லை? எனவே விண்ணுலகோ, மறுபிறப்போ, ஊழ்வினைப்பயனோ என ஏதுமில்லை என்கிறார்.

பொருள்முதல்வாதம் இந்திய தத்துவத்தில் ஆதியில் இருந்தே வலுவான எதிர்மறைப் பாதையில் சென்று வந்ததை, இக்கதைகளும் உரையாடல்களும் தெரிவிக்கின்றன. இது தத்துவப்பாதை அல்ல. பொருள்முதல்வாத தத்துவத்தைக் கட்டமைப்பதற்கான பாதை அல்ல. மாறாக, உலகின், விண்ணுலகின் அதீத கற்பனை உன்னதங்களை தேடிக்கொண்டிருக்காமல், இந்த வாழ்வு இங்கு, இப்போது வாழப்பட வேண்டியது என போதிக்கும் பாதை. அஜிதரும், பாயாசியும் வேத சடங்குகள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வழி என்ற கூற்றையும், கடவுளின் இருப்பையும், உலகின் மேல் கடவுளின் இடையீடையும் தீவிரமாக மறுத்தனர்.

இது ஒரு புரிதல்.

இன்னொரு புரிதல் இது.

ஆத்மா குறித்த இயங்கள், வேத மரபு, பவுத்தம், சமணம் என எல்லாவற்றையும் எதிர்க்க வல்ல பொதுவான தத்துவத்தின் அங்கமே பொருள்முதல்வாதம்  என்று கொள்ள முடியும். அது ஒரு சிந்தனை பள்ளியாக, அமைப்பாக இருந்திருக்கலாம். இந்து பவுத்த சமணக் கருத்துமுதல்வாதத்தோடு விளைந்த இடைவிடாத முரண்பாடுகளால் பொருள்முதல்வாதம் சிந்தனையின் முக்கியமான தத்துவக் கூறுகள் அழிந்திருக்கலாம். அவர்களின் எதிர்த்தரப்பினர், பொருள்முதல்வாதிகள் அப்பட்டமான இன்பத்தையும் போகத்தையும் விழைபவர்கள் என குறுக்குகிறார்கள். மகிழ்ச்சியான வாழ்வை தவிர வேறு நோக்கமில்லை, இறப்பிற்கு பின் ஒன்றுமில்லை என்பதே சார்வாகர்களின் கருத்து எனச் சொல்லப்படுகிறது.

சமண அறிஞர் ஹேமசந்திரர், சார்வாகர்களின் கடும் எதிர்ப்பாளர். ஆனாலும், அவர்களின் சிந்தனையை பின் வரும் அழகான உவமையால் விவரிக்கிறார்: இவ்வுலகின் இன்பங்களை துறப்பது, அவற்றிற்காக மறுவாழ்வில் மறுபிறப்பில் முயலுவது போன்றவை உள்ளங்கை தேனை ருசிப்பதை விட்டு, வெறும் முழங்கையை நக்குவதற்கு ஒப்பானது!

சார்வாகர்களை வெறும் இன்பத்தைத் தேடுகிறவர்கள்(Hedonists) என விளங்கிகொள்வது தவறாகும். சிறு பகுதிகளாக கிடைக்கும் சார்வாக சூத்திரங்களில் இன்பம் குறிப்பிடப்படவில்லை. சார்வாகர்கள் வெற்று இன்பத்தைத் தேடுகிறவர்களாக இருந்திருந்தால் அதை வைத்தே அவர்களை குறுக்கி விவாதங்களில் இருந்து வெளியேற்றும் பெரும் வாய்ப்பை மரபுவாதிகள் தவறவிட்டிருக்க மாட்டார்கள்.

பொருள்முதல்வாதிகள் மற்ற சிந்தனைகளை தத்துவங்களை கடுஞ்சொற்களால் மறுப்பது,  தர்க்கத்துடன் விவாதிக்காமல், வெறும் உவமைகளை மட்டும் அளிப்பது என்று இதுவரை பார்த்தோம். இந்திய தத்துவத்தில், அறிவுக்கூறியல்(Epistemology) மற்றும் ஆத்மா கொள்கை என்ற இரண்டு மையமான சிந்தனைகளின் மேல் பொருள்முதல்வாதிகள் குறிப்பிடும்படியான பங்களிப்புகளை ஆற்றியுள்ளனர். அறிவுக்கூறியல் என்பது, ‘ஊகம்’ எனும் பிரமாணத்தின் துணையுடன், மனித அறிவுத்தொகை பற்றிய பயில்தல் முறை. இங்கே பொருள்முதல்வாதிகள் ஏற்கும் ‘ஊகம்’ என்பது இரண்டாம்பட்சமானது, அன்றாடத்தில் நாம் பயன்படுத்துவது, புலனறிவால் ஏற்கப்படக்கூடியது. ‘புலனறிவு’ பிரமாணத்தை மட்டுமே ஒரே பிரமாணமாகவும், நேரடி அறிவுக்கான வழியாகவும், ‘பிரமானைகவாதின்’ என முன் வைப்பது. பிரஹஸ்பதி புலனறிவு ஆளுகைக்கு உட்பட்ட அறிவு மட்டுமே முதன்மையானது என்றும், ஊகத்தால் பெறப்படுவது இரண்டாம் பட்சம் என்கிற வாதத்தையும் முன்வைக்கிறார். புலியின் உறுமல் கேட்டவுடன் புலியின் இருப்பை அறிவது நம் புலனறிவின் விழிப்பால் தானே தவிர மற்றவரின் சொல்லும், புலி இருக்கலாம் எனும் ஊகமும் அறுதியை அளிக்காது. நாம் புலனறிவால் நூறு சதவீத உறுதியை பெறமுடியாத போது மட்டும், ஊகத்தின் உதவியை நாடலாம். மேலும் இது போன்ற ஊகங்களை, அன்றாட நிகழ்வுகளில், பொருட்களில் உபயோகிக்கலாம். ஆனால், விண்ணுலகு போன்றவற்றிற்கு அல்ல. நியாய மற்றும் பிற வேத பள்ளிகள் மிகச்சரியாக இதே வகையான ஊகத்தை தான் முன்வைக்கின்றன. ஆனால் அவர்களின் அறிவுகூறியல் விவாதங்கள் ஆன ஆத்மா, வீடுபேறு போன்றவற்றின் மீது பிரயோகிக்கின்றன.

சார்வாகர்கள் இவற்றை ஊகங்களுடன் அணுகுவதை மறுக்கின்றனர். புலனறிவால் சோதிக்க முடியாத எந்த சர்ச்சைக்குரியவற்றையும், மர்மமானவற்றையும் ஏற்பதில்லை. புகை என்ற ஊகம் மூலம் தீயை ஏற்கலாம், அதற்கு தர்க்க அழுத்தங்கள் தேவை இல்லை. ஆத்மா, அனைத்துமான கடவுள், அனைத்தும் அறிந்த இறை, விண்ணுலகம் போன்றவற்றை ஊகம் மூலம் விளக்க கூடாது. இந்த விலகல்தான் நமது பொருள்முதல்வாதிகள் எனப்படும் நடைமுறை தத்துவவாதிகளின் தனித்துவம்.

பதினாலாம் நூற்றாண்டின் அறிஞர் சோமஜலகா சொன்ன ஓநாயின் கால்தடம் எனும் நீதிக் கதையை இப்போது காணலாம். அன்பான, புத்திசாலியான ஒரு தம்பதிகள் இருந்தனர். கணவன் நாத்திகர், மனைவி ஆஸ்திகர் என்பது மட்டுமே அவர்களின் இடையேயான வேறுபாடு. புலனறிவு மட்டுமே பிரமாணம் என கணவனும், ஊகமே முக்கிய பிரமாணம் என மனைவியும் விவாதித்தனர். மனைவியை ஏற்றுக்கொள்ள வைக்க, யாருக்கும் தெரியாமல், கணவன் தன் கைவிரல்களால், புல்வெளியின் மீது ஓநாயின் கால்தடங்கள் போல தடங்கள் ஏற்படுத்திவைக்கிறார். அந்த தடங்கள் ஊர்க்காரர்களால் கண்டிபிடிக்கப்பட்ட போது அவை நிஜ ஓநாயின் கால்தடங்கள் எனவும், ஊருக்குள் ஓநாய் புகுந்தது எனவும் முடிவு செய்கின்றனர். தவறான ஊகத்தின் விளைவு இது. எனவே புலனால் அறிவதுதான் எப்போதும் சரியாக இருக்கும் என்று மனைவியிடம் கணவர் சொல்கிறார். இவ்வாறு தவறாக ஊகத்தைச் செய்தவர்களில் எல்லா பிரமாணங்களையும் உபயோகிக்கும் பிராமணர்களும் அடங்குவர் என கணவன் அழுத்திக் கூறுகிறார். ஓநாயின் தடங்களை முழுதும் பின் தொடர்ந்து செல்லாமல் தவறாக முடிவை அவர்கள் செய்கின்றனர்.

அவி வளர்க்கும் பிராமணர்கள், குறிப்பிட்ட பிரமாணங்களை, மொழி சான்றுகளை அறுதி உண்மையாக முன்வைத்து, சாதாரண மக்களை தங்களுக்கு தற்போது கிடைக்கும் இன்பங்களை விட்டு, சொர்க்கத்தில் இன்பமாக இருக்கலாம் என்றும் தெய்வ சடங்குகள் எனும் மூடநம்பிக்கையிலும் தவறாக வழி நடத்துகின்றனர். இறந்த பின் அடையும் விண்ணுலகம் நமது அறிவுக்கு மூலமான புலனறிவுக்கு முழுதும் அப்பாற்பட்டது. ஆகவே இது போன்ற அறியமுடியாமைகளை, சாட்சிகள் இல்லாததை, புரிதல்களுக்கு அப்பாற்பட்டதை மறுப்பது நன்று.

பிரஹஸ்பதி என்ற தத்துவவாதி உண்மைகளின் தன்மையை ஆராய சொல்கிறார். நிலம், தீ, காற்று மற்றும் நீர் என்கிற உண்மைகளின் ஒன்று சேர்ந்துதான் உடல், புலனறிவு போன்ற பொருட்கள் ஆகின்றன. சைதன்யம் எனும் உள்ளுணர்வும் இவற்றிலிருந்து உருவாகிறது. புளிக்கவைக்கப்பட்ட உட்பொருட்கள் மூலம் உருவாகும் பானம், மயக்கத்தை அளிக்கும் சக்தியை எடுத்துக்காட்டாக தருகிறார். உள்ளுணர்வு இருக்கும் உடலே, புருஷ எனும் மனித உடலாக தகுதி பெறுகிறது. உடலின்றி சிந்தனை இல்லை. இந்த எளிய பொருட்களில் இருந்து எப்படி இந்த பெரும் பிரபஞ்சம் இவ்வளவு சிக்கலாக பிரமாண்டமான வேறுபாடுகளுடன் வளர்ந்து நிற்கிறது என நாம் வியக்கலாம். மூலங்களில் உள்ள வேறுபாடுகளால் உலகம் வேறுபட்டு உள்ளது. ‘ஜென்மம் – பிறப்பு – என்பது, மயிலின் தோகையின் கண்களைப் போன்றது. ஒவ்வொரு மயிலின் தோகையும் ஒவ்வொரு மயில்தோகைக் கண்ணும் பிறப்பிலேயே வேறுபட்டுள்ளது. அது போன்றுதான் மனிதப் பிறப்பும் மனித உயிர்கள் என்பவை உள்ளுணர்வுடன் கூடிய பௌதீக உடல்கள். அந்த உள்ளுணர்வும் அதே உடல் பொருட்களின் கூட்டுவிளைவால் உருவாகிறது., அதை தாங்கும் உடல் இல்லாமல் போகும்போது உள்ளுணர்வும் இல்லாமல் போகும். உடலில் இருந்தே மனம் உருவாகிறது என்கிற இந்த கூற்று, மனித உடல் மனம் குறித்த பெரும்பாலான தற்கால தத்துவவாதிகள் கூற்றுடன் ஒத்துபோகிறது.

நாத்திகம் (Nasthika):

மக்கலிகோசலா, புத்தரின் சபையில் காசியபருடன் விவாதத்தில்.

 பிராமணர்களின் உலகப்பார்வையுடன் முரண்பட்ட மற்றொரு மரபு நாத்திக மரபு. இது பொருள்முதல்வாதிகளின் பள்ளியை சாராது. ஆஜீவிகர்கள்(Ājīvika) எனப்படும் இவர்கள் மிகவும் எதிர்மறையானவர்கள். பிறப்புச் சுழற்சியில் இருந்து தப்ப முடியாது, அதிலிருந்து வீடுபேறு பெற முயல்வதும் வீண், ஒவ்வொருவரும் அவர்களின் பிறப்பு சுழற்சி தானாக முடியும் வரை, ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும், காத்திருக்க வேண்டும் என்கின்றனர்.

ஆஜீவிக சிந்தனையாளர் மக்கலி கோசலா(Makkhali Gosāla) தர்மம் அதர்மம் என்ற இருமையையும், முயன்றால் முக்தி அடையலாம் என்பதையும் மறுக்கிறார். எல்லா உயிரும் காலபோக்கில் இறுதி முக்திநிலையை அடைந்து தீரும் என ஒரு அணு பிரபஞ்சவியல் கொள்கையை முன்வைக்கிறார். மறுபிறப்பு மட்டுமல்லாமல், ஒருவரின் ஆத்மாவை இறந்த உடலின் மீது செலுத்தி அதை உயிர் பெற செய்யலாம் என்கிற மறுஉயிர்ப்பு அல்லது உயிர்த்தெழுதல் எனும் சிறப்பு கொள்கையையும் நம்புகிறார். ஆகவே நாம் ஆஜீவிகர்களை பொருள்முதல்வாதிகளின் எனக்கொள்ள இயலாது. வாழ்வில் எல்லாமும் முன்னரே வகுக்கப்பட்ட நியதி எனும் விதிப்படி தான் நடக்கும். அதை மீற மனிதனின் செய்யும் முயற்சிகள் யாவும் பலனற்றது, பொருளற்றது என்பதே அவர்கள் சொல்வது.

‘புத்தரின் உரைகளில்’ இவரின் பார்வைகள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன. மனித வாழ்வு என்பது சக்தியோ, வலிமையோ, ஆரோக்கியமோ ஏதுமற்றது. வகுக்கப்பட்ட இன்ப துன்பங்களை அனுபவித்து, ஆறு வகையான மறுபிறப்புகளை கடக்க வேண்டும். அந்த இன்ப துன்பங்களும் வாழ்வின் இறப்பு பிறப்பு வட்டத்தால் அளக்கப்படுகிறது. அந்த வாழ்வில் அதிகமோ குறைவோ, உயர்வோ தாழ்வோ ஏதுமில்லை. தரையில் வீசப்பட்ட நூலுருண்டை முழுதும் அவிழ்ந்து நிற்பதுபோல, அறிவுடையவரோ இல்லாதவரோ, அளிக்கப்பட்ட வாழ்வை துன்பங்களுடன் வாழ்ந்து முடிக்கின்றனர்.  மனிதர்கள் தங்கள் செயலுக்கு பொறுப்பேற்பதை ஆஜீவிகர்கள் மறுக்கின்றனர். ். மனிதனின் சிந்தனை அவனது செயல்களுக்கான காரணம் என்பதே ஒரு கற்பனை என்றால், அவன் எப்படி வாழ முடியும்? கோசாலா ஒரு துறவி போல வாழ்வதுதான் சாத்தியம் எனக் கற்பிக்கிறார். இயன்றவரை நம் செயல்களின் சுழற்சியில் இருந்தது விலகி, காட்டுவாசி போல துறவு வாழ்வை வாழ சொல்கிறார். அவர்களின் காத்திருப்பு முடியும் வரை என்றும், கடைசி பிறப்பு வாழ்வை இவ்வாறு அனுபவித்து முடிக்கலாம்!

பி.ஏ. கிருஷ்ணன்

பி.ஏ. கிருஷ்ணன் (பிறப்பு: 1946) ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும் தமிழ் எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. புலிநகக்கொன்றை, கலங்கிய நதி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

சதீஷ் குமார் RM

சதீஷ் குமார் RM. பெங்களூரில் கணிபொறித்துறையில் பணியாற்றுகிறார் இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர்.

  •  
  •  
  •  

1 Comment

  1. “யார் அவர்?”
எங்கே பிறந்தார்? எங்கிருந்து வந்தார்; எதற்காக வந்தார்!? ஒன்றும் புரியவில்லை; அல்லது அதைப் புரிந்துகொள்வதில் யாருக்கும் விருப்பம் இல்லை.
யார் இவர்? எதற்காக இந்த பிழைப்பு? ஏன் அலைகிறார்; அல்லது அலைக்கலைக்கப்படுகிறார்.
விடை இல்லை; இல்லவே இல்லை, அதை அறிந்து கொள்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது.
அவர் என்ன ஒரு பொருளா? அவர் ஒரு பொருட்டே இல்லை.
அவர் ஒரு பொருளாக பார்க்கப்பட்டு இருப்பார் – பெண்ணாக, அதுவும் கொஞ்சம் இளமையுடன் கூடிய அழகுடன் இருந்து இருந்தால் என்று தோன்றுகிறது – இரக்கப்படுவதற்கும் அல்லது இறைதேடி அலைவதற்கும்.
50-க்கு மேல் தான் அவரது வயது என்று ஒரு தோராயமான கணிப்பு. கரியநிறம். கிளிந்த சட்டை, லொட லொட பாண்ட்.
அவரை அவன் என்று யாரும் சொல்லாதற்கு காரணம் அவர் ஒருவிதத்தில் கண்ணியத்துடன் தான் இருக்கிறார் என்று சொல்லவேண்டும்.
யாரும் இங்கே அவரை நாடோடி, அனாதை அல்லது பிச்சைக்காரன் என்று சொல்லாதது வியப்புக்குரியதே!
யாரிடமும் யாசிப்பதும் இல்லை, யாசித்தவரைப் பற்றி யோசிப்பது இல்லை இந்த “யாரோவுக்கு”. 
அவர் கண்களில் ஏக்கமோ; இருக்கமோ காணவில்லை.
ஒரு நாள்:- 
காலை சுமாராக 6.30 மணி இருக்கும், எல்லோருக்குமாக பகல் விடிந்தது. எங்களுடைய காலனியில் “நான்கு” வீடுகள். எல்லோரும் அவரவர் தம் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறோம்.
8.30-க்குள் எங்களுடைய எல்லா தேவைகளும் முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
ஆம்! அவர் மட்டும் வெளியே இருந்து இரும்பு கதவை திறந்து ஓடிவருகிறார்.
தூய்மை பணியாளர்களுக்கு எடுத்துச் செல்ல Bucket எல்லாம் நிறம்பி வழிகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் எல்லாம் கலந்த கலவை அது.
அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து எல்லாவற்றையும் வண்டியில் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு சில நொடியில் அந்தக் கழிவை ஒரு கை ஏந்துகிறது. அதைப் பிழிகிறது. அந்த ஈரத்தை உறிஞ்சுகிறது.
எல்லோரும் பார்க்கிறோம். அவர் மேலும் ஒரு Bucket-ல் உள்ள மிஞ்சிய நீரை குடிக்கிறார்.
“போ! போ! போ!” என்று போர் குறல்கள். மழையில் தன் கால் சட்டையை சரி செய்து கொண்டு சத்தம் இல்லாமல், தன் தேவையை பூர்த்தி செய்து கொண்டு தன் வழிசெல்கிறார்.
கூடவே இருந்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரிவதற்கு எனக்கு அனுபவம் இல்லை.
நானும் ஒருநாள் துறத்தப்படுவேன். அப்போது எனக்கு அவமானம் இருக்காது. மாலைகளும் அழுகைகளும் ஒன்றுசேர்ந்தாலும் அதைப் பொருட்படுத்த என் ஜீவன் அனுமதிக்காது.
அந்த அனுமதியை இப்போதே நிராகரிக்கும் இந்த “அவர்” ஒரு விதத்தில் சித்தரே!!!
நான் என்கிற,Raman Selvaraj

Popular posts from this blog

humanity is humiliated

பரமஹம்ஸயோகனந்தர்

Mutual Funds